×

என்.பி.ஆர்.க்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

சென்னை: என்.பி.ஆர்.க்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறும் என கூறப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தின் போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின் கேள்வி நேரத்திற்கு பின்பான நேரமில்லா நேரத்தில் என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதில் என்.பி.ஆர். சட்டத்தால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு எழுதிய கடிதத்திற்கு பதில் வந்ததா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை என்றார். நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டால் அது சட்டத்தை கட்டுப்படுத்தாது. எனவே, தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராக பொய்யான தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற நாங்கள் விரும்பவில்லை, என்றும் அமைச்சர் கூறினார். அமைச்சரின் இந்த பதில் திருப்தி அளிக்காததால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். தமிமுன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இயலாது என ஏற்கனவே கூறிய நிலையில், தற்போது என்.பி.ஆர்.க்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Nobody ,RB Udayakumar ,passing resolution ,NPR , NPR, Assembly, Resolution,Minister RB Udayakumar
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...