×

திண்டிவனம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து எரிந்து நாசம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து எரிந்து நாசமானது. திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது வயலில் 2 ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தார். அறுவடை முடிந்த நிலையில் வைக்கோலை அதே ஊரை சேர்ந்த துரைசாமி என்பவருக்கு விற்றுள்ளார். இதையடுத்து துரைசாமி வயலில் இருந்து வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வந்தார். அப்போது வயல் பகுதியில் தாழ்வாக இருந்த உயர்மின்னழுத்த கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தில் இருந்த டயர் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சாதுரியமாக செயல்பட்டு பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பற்றி எரிந்தபோது டயர் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tindivanam , Tindivanam
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...