சென்னை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரத்தை சேர்ந்த மாரியப்பன் (28), பெரும்புதூர் ரெட்டி தெருவில் வாடகை வீட்டில் தங்கி, அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுமகாலட்சுமி (25). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இவர்களுடன், அனுமகாலட்சுமியின் தந்தையும் தங்கியுள்ளார்.இந்நிலையில், நேற்று காலை மாரியப்பன் வீட்டில் காஸ் கசிவால் பயங்கர சத்தத்தடன் சிலிண்டர் வெடித்தது. உடனே, வீட்டில் தீப்பிடித்துள்ளது. உள்ளே இருந்தவர்களின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி சென்று பார்த்தனர்.
அப்போது அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறி கிடந்தது. வீட்டின் கதவை தட்டியபோது யாரும் திறக்கவில்லை. கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.பின்னர் பொதுமக்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாரியப்பன், அனுமகாலட்சுமி, 2 வயது குழந்தை மற்றும் அனுமகாலட்சுமியின் தந்தை ஆகியோர் பலத்த தீ காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு, பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.