×

திமுக பிரமுகர் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் சிறை: மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பணத்தகராறில் திமுக பிரமுகரை வெட்டி கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஆவடி அடுத்த கோவில்பதாகை, வன்னியர் தெருவை சேர்ந்தவர் பதாகை வீரராகவன் (65). ஆவடி நகர திமுக முன்னாள் துணை செயலாளர்.  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மோரை கிராமம் திருமலை நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (55). ஆட்டோ டிரைவர்.  வீரராகவன் சொல்லும் வேலைகளை பத்மநாபன் செய்து வந்தார். அதற்குரிய பணத்தை பத்மநாபனுக்கு தினமும் வீரராகவன் கொடுப்பது பழக்கம்.இந்நிலையில், சொந்தமாக ஆட்டோ வாங்க பணம் தருமாறு வீரராகவனிடம் பத்மநாபன் கேட்டுள்ளார். இதற்கு வீரராகவன் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. இதனால், வீரராகவனை கொலை செய்ய பத்மநாபன் திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில், கடந்த 16.11.2016 அன்று மாலை ஆவடி கனரக தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில், வீரராகவன் நடைபயிற்சி செய்தபோது, அங்கு வந்த பத்மநாபன் வீரராகவனை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினார்.

ரத்த வெள்ளத்தில்  கிடந்த வீரராகவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆவடி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே வீரராகவன் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மநாபனை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வநாதன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், ரியல் எஸ்டேட் அதிபர் வீரராகவனை கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக, பத்மநாபனுக்கு ஆயுள் தண்டனையும், ₹1,000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பத்மநாபனை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். அரசு தரப்பில் வக்கீல் வி.ஆர்.ராம்குமார் ஆஜராகி வாதாடினார்.

Tags : Auto driver ,DMK ,The DMK Murder Case Life Prison for Auto Driver: The District Court , DMK ,murder,, Auto Driver,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி