×

உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துவிட்டதால் பொங்கல் பரிசு திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை பொங்கல் பரிசு திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று  உத்தரவிட்டது.

உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தவுடன் அனைத்து அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணம் வழங்கும் திட்டம் ரூ. 2,363 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, தமிழகம் முழுவதுமுள்ள 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு திட்டம் விநியோகிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். அரசு தரப்பின் விளக்கத்தைத் தொடர்ந்து, இவ்வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : SC ,Pongal , Local Elections, Pongal Gifts, Dismissal, High Court
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; 50...