சென்னை: நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நேற்று திடீரென சந்தித்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினியின் வீடு உள்ளது. இங்கு சென்ற காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ரஜினியை சந்தித்து பேசினார். ரஜினி அரசியல் கட்சி தொடங்க ஆயத்தமாகும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. முன்னதாக ரஜினி, சில அரசியல் கட்சி தலைவர்கள், ரஜினி மக்கள் மன்றத்தினரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. வெளியில் வந்த திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:
‘எனது பேரன் பிறந்தநாளையொட்டி அவரிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக தான் இந்த சந்திப்பு. அரசியல் பேசாமல் எப்படி இருக்க முடியும். இந்தியா மற்றும் தமிழகத்தில் நடக்கும் பொதுவான அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினோம். அவர் என்னிடம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை. நானும் எந்த ஆலோசனையும் கூறவில்லை. நாட்டில் உள்ள பொதுவான விஷயங்கள் குறித்து பேசினோம். எம்பியாக பதவி ஏற்க உள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் புதிதாக வரக்கூடிய எம்பிக்களுக்கும் வாழ்த்துக்கள்.