பர்பனி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக நடந்த போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதற்காக மகாராஷ்டிராவின் பர்பனி நகரை சேர்ந்த 62 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் மகாராஷ்டிராவின் பர்பனி கலெக்டர் அலுவலகம் அருகே இதேபோன்ற ஒரு போராட்டம் நடந்தது. இதில் பேசிய ஷேக் கனி ஷேக் ரஹ்மான் (62) பிரதமரை கடுமையான சொற்களால் விமர்சித்தார். அவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து உள்ளூர் பாஜ தலைவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் ஷேக் மீது மகாராஷ்டிரா போலீஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.