
திருமலை: ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தெலுங்கு தேசம் எம்எல்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்த சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்சி டோக்கா மாணிக்க வரப்பிரசாத், முன்னாள் எம்எல்ஏ ரகுமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் ஜெகன் மோகனை தாடேபல்லியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
அவர்களுக்கு முதல்வர் ஜெகன் மோகன் சால்வை அணிவித்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். இதேபோன்று கடப்பா மாவட்டம், புலிவெந்துலாவில் தெலுங்கு தேசம் சார்பில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மற்றும் ஜெகன் மோகனை எதிர்த்து போட்டியிட்டு வந்த சதீஷும் அக்கட்சியிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தெரிவித்துள்ளார்.