நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சி மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 2 ஆண்டாக ஊதியம் கிடைக்காமல் காத்திருக்கின்றனர். அரசு நடத்தும் பொதுத்தேர்வுகளில் பணி செய்யும் ஆசிரியர்களுக்கு தனியாக சிறப்பு உழைப்பூதியம் வழங்கப்படும், கடந்த 2018-19 மற்றும் 2019-20ல் நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சி பொதுத்தேர்வில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இதுவரை உழைப்பூதியம் வழங்கப்படவில்லை. இதுபோல் கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது பணியாற்றிய வழித்தட அலுவலர் பணி, அறை கண்காணிப்பாளர், பறக்கும்படையினர், முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு உழைப்பூதியம் வழங்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு வழங்கப்படாததால் இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களுக்கு முறையிட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனிடையே நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. எனவே தாமதமின்றி நிலுவையில் உள்ள தேர்வுப்பணி உழைப்பூதியத்தை வழங்கவேண்டும் என சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.