×

‘வரிபாக்கியை வசூல் செய்ய வேறு பல வழிகள் உள்ளன’ பள்ளிக்கூட வாசலில் குப்பைத்தொட்டி வைப்பதா? ஐகோர்ட் கிளை கடும் கண்டனம்

மதுரை: வரி வசூல் செய்வதற்காக பள்ளிக்கூட வாசலில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட ஐகோர்ட் கிளை, ராஜபாளையம் நகராட்சிக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராஜபாளையம் நகராட்சியில் அதிகப்படியான வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை வசூலிப்பதில் கடும் கெடுபிடி காட்டப்படுகிறது. இதை எதிர்த்து வியாபாரிகள் மற்றும் ெபாதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வரி வசூல் செய்வதற்காக கழிவுநீர் வடிகால் வசதியை முறையாக செய்யாமலும், குப்பைகளை அகற்றாமலும் விட்டு விடுகின்றனர். வரிபாக்கிக்காக ஒரு தனியார் பள்ளிக்கூட வாசலிலும், மழலையர் பள்ளி முன்பும் குப்பைத்தொட்டியை வைத்துள்ளனர். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் கோழி இறைச்சி, மீன் இறைச்சி கழிவுகளால் பள்ளியின் சுகாதாரமான நிலை பாதிக்கிறது.

மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. வரி செலுத்தா விட்டால் சட்டப்படி ஜப்தி போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால், குப்பைத் தொட்டியை வைத்து ஒட்டுமொத்த சுற்றுப்புறத்தையும் பாதிப்பை ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே, வரி பாக்கிக்காக பள்ளிகள் முன் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ‘‘உள்ளாட்சி அமைப்புகளில் வரி வசூல் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. அதை தவிர்த்து மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூட வாசலில் நோய் பரப்பும் வகையில் குப்பைத்தொட்டியை வைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. நகராட்சியின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது ’’ என கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

பின்னர் நீதிபதிகள், ‘‘வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைக்கிறோம். அப்போது பள்ளிகள் முன் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை அகற்றி, படத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர். பிற்பகலில் மீண்டும் விசாரணை தொடங்கியபோது, வரி செலுத்தாத பள்ளிகள் முன் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வரி வசூலிப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.



Tags : taxpayers ,Icort Branch , Trash, tax collection, HC Branch
× RELATED உபரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு...