சென்னை: அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவன் சிகிக்சை முடிந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுபோல் கொரோ னாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியர் குணம் அடைந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் தங்குவதற்காக ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைத்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார்.
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசிடம் போதிய அளவில், முககவசம் கையிருப்பில் உள்ளன என்றார். பின்னர் விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் குணமடைந்தார். கடைசியாக எடுக்கப்பட்ட சோதனையின்படி அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது, தமிழகம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக உள்ளது’ என்றார்.