×

ஒரு கோட்டை நெல் ரூ.1, 622 : குமரியில் நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல்....அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டை நெல் ரூ.1622க்கு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் குத்தகை விவசாயிகளிடம் உரிய ஆவணம் இல்லாதால் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குத்தகைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. மாவட்டத்தில் தற்போது கும்பபூ அறுவடை நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில இரு தினங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் ஒரு சில இடங்களில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேரூர், தாழக்குடி பத்து, அனந்தனார் சானல் பாசன வசதிபெரும் வயல்களில் அறுவடை நடக்கவில்லை. இந்த பகுதியில் வயல்கள் நன்கு காய்ந்த பிறகு அறுவடை செய்யலாம் என்று விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இருப்பினும் மாவட்டத்தில் 60 சதவீதம் அறுவடை முடிந்து இருக்கிறது. இப்படி அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி புத்தளம், செண்பகராமன்புதூர், திட்டுவிளை, தேரூர், கிருஷ்ணன்கோவில், திங்கள்நகர் ஆகிய இடங்களில் நெல்கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து வருகின்றனர்.

அறுவடை சய்யப்படும் வயல்பகுதிகளுக்கு சென்று வியாபாரிகள், விவசாயிகளிடம் கோட்டை (87 கிலோ)க்கு ரூ.1150 கொடுத்து கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் நெல்கொள்முதல் நிலையத்தில் ஒரு கோட்டை ரூ.1622.55க்கு கொள்முதல் செய்யபடுகிறது. நெல்கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நேரடியாக நெல்லை கொண்டு சென்று கொடுக்கவேண்டும். நெல்கொள்முதல் நிலையத்தில் கொடுக்கப்படும் நெல்களுக்கு விவசாயிகள் வங்கி கணக்கில் 5 முதல் 7 நாட்களில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இருப்பினும் குத்தகைக்கு எடுத்து நெல் விவசாயம் செய்பவர்கள் அவற்றை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாமல் உள்ளனர். இதனால் குத்தகை விவசாயிகள் குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் அவர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது விவசாயிகள் தங்களது விளைநிலத்தின் ‘அடங்கல்’ சான்றிதழ்களை காண்பித்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நிலத்தை குத்தகை எடுத்து நெல்சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு ‘அடங்கல்’ சான்றிதழ் கிடைப்பது இல்லை.

இதனால் அவர்கள் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய முடிவது இல்லை. குமரி மாவட்டத்தில் குத்தகை எடுத்து விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும், நில உரிமையாளரிடம் இருந்து நிலத்தை வாய்மொழி குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வருகின்றனர். அவர்கள் குத்தகை எடுத்து பயிரிடுவதற்கான எந்த ஆவணங்களும் குத்தகைதாரர்களிடம் இருப்பது இல்லை. இதனால் அவர்கள் விளைவித்த நெல், நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படாமல் நிராகரிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் விவசாயிகள் அனைவருக்கும் உழவர் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை வருவாய் துறை விசாரணை நடத்தி வழங்கியுள்ளது. உழவர் அட்டை உள்ள விவசாயி நெல்கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரும்போது, நெல்லை ெகாள்முதல் ெசய்து, அவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள பணம் கொடுக்கும் போது அவர்களும் லாபம் அடைவார்கள். இதனை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கொள்முதல் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு கிலோவிற்கு ரூ.18 வீதம் வழங்கப்படுகிறது. ெவளி மார்க்கெட்டில் ஒரு கோட்டை ரூ.1150க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. நெல்கொள்முதல் நிலையத்தில் ஒரு கோட்டைக்கு ரூ.472 அதிகமாக கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புத்தளம், திட்டுவிளை ஆகிய கொள்முதல் நிலையங்களில் நெல் இருப்பு வைப்பதற்கு எந்த வசதியும் இல்லை. விவசாயிகள் நெல் கொண்டுவரும்போது மழை பெய்தால், அனைத்தும் மழையில் நனையும் நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த இரு நெல்கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் அதிக அளவு நெல் கொண்டுவந்தாலும், மழையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள உரிய நடவடிக்ைக எடுக்கவேண்டும். மாவட்டத்தில் விளை நிலங்களை குத்தகை எடுத்து நெல் விவசாயம் செய்யும், விவசாயிகளின் நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வது இல்லை. அவர்களது பெயரில் நிலத்திற்கான அடங்கல் சான்றிதழ் இல்லாததால் இந்த நிலை ஏற்படுகிறது. இதனால் வாய்மொழியில் விளை நிலங்களை குத்தகை எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளின் உழவர் அட்டையின் நகல் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியிடம், இந்த நிலத்தில் இந்த குத்தகை விவசாயி பயிர்செய்து இருப்பது உண்மைதான் என சான்றிதழ் பெய்து வந்தால், நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்கொள்முதல் செய்யலாம் என்ற உத்தரவாதத்தை மாவட்ட நிர்வாகம் அளித்தால், குத்தகை விவசாயிகளுக்கு நெல்லுக்கு போதிய விலை கிடைக்கும். இதனை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தவேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நெல்லுக்கு கிடைக்கும் விலை, குத்தகை விவசாயிகளுக்கும் கிடைக்கும். என்றார்.


Tags : Kumari ,Paddy , Paddy, procurement, officials, action
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...