×

சீனாவின் வூகான் நகரை போல மாறி வரும் கேரளா!!.. 12 பேருக்கு கொரோனா உறுதி.. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மார்ச் 31வரை மூடல் ; பொது நிகழ்ச்சிகள் ரத்து

திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் 7ம் வகுப்பு வரையிலான அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்கூடிய சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.7ம் வகுப்பு வரை இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே நேரம் 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது,கேரளாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் நாளை முதல், மார்ச் இறுதி வரை மூடப்படும். மதரஸாக்கள், அங்கன்வாடிகள், உள்ளிட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் 31 வரை மூடப்படும்.7ம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்கள் பாஸ் செய்யப்படுவார்கள். பிற வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.திருவிழாக்களை ஒத்திவைக்க மத அமைப்புகள் கோரப்படும். வழிபடும் இடங்கள் மக்கள் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். திருமணங்கள் குறைந்த அளவுக்கான விருந்தினர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்

இதனிடையே 3 வயது சிறுவன் உட்பட இதுவரை கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கடந்த 7ம் தேதி கேரளாவுக்கு இத்தாலியில் இருந்து வந்த குடும்பத்தில் 3 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 1,116 பேருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் வீரியம் மிகவும் அதிகமாக இருப்பதால் இதனை மாநில பேரிடராக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே கொரோனா வைரஸ் எதிரொலியால் கேரளாவில் மார்ச் 31ம் தேதி வரை சினிமா தியேட்டர்கள் மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொச்சியில் நடந்த மலையாள திரையுலக அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Kerala ,China ,Wukan City ,events ,Wukan City Public Events , Kerala, Corona, Bird, Fever, School, Colleges
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...