வத்திராயிருப்பு: மாசி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாசி பவுர்ணமியை முன்னிட்டு, மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், கடந்த 7ம் தேதி முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7ம் தேதி சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசித்து சென்றனர். நேற்று மாசி பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான வெளியூர் பக்தர்கள் நேற்று காலை தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
இதனையடுத்து காலை 6 மணிக்கு பக்தர்களை தரிசனத்திற்கு செல்ல வனத்துறையினர், தாணிப்பாறை கேட்டை திறந்து விட்ட பின் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர், சிறுமியர்கள் கைக்குழந்தைகளுடன் பலர் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். இரவில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம் பன்னீர், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சந்தனமகாலிங்கம், 18 சித்தர்கள், பிலாவடி கருப்பசாமி, சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பலர் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் விஸ்வநாத் செய்திருந்தார்.