அக்ரா: கானா நாட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர். கானா (Ghana) ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. கானாவின் போனொ கிழக்கு மாகாணம் கின்டபோ நகரில் இருந்து டெட்ஸிமென் நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கின்டபோ-டமெல் தேசிய நெடுச்சாலையில் உள்ள அமொமா குவன்டா என்ற கிராமம் அருகே பேருந்து சென்றபோது சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த மற்றொரு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இரண்டு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் பேருந்து தீ பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 35 பேர் உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.