புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பரில் வங்கதேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மேமன் மற்றும் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் ஆகியோர் இந்தியாவுக்கான பயணங்களை ரத்து செய்தனர். இந்த பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா தெரிவித்தாலும், இரு நாடுகளுக்கிடையே உறவுகள் பாதித்து இருந்தன.
இதற்கிடையே கொரோனா பாதிப்பால் வங்கதேசத்தில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்தது. கொடிய வைரஸ் பரவாமல் இருக்க, அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், வங்கதேச நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி வரும் 17ம் தேதி வங்கதேச தலைநகர் தாகா செல்வதற்கான பயண திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால், வங்கதேசத்திலும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, பிரதமர் மோடியின் அந்நாட்டு பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.