ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு நேற்று திடீரென வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரானில் சிக்கி தவிக்கும் காஷ்மீரிகளின் உறவினர்களை சந்தித்தார்.சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 104 நாடுகளுக்கு பரவி உள்ளது. ஈரானில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அங்கு சிக்கி தவிக்கும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள், யாத்ரீகர்கள், மீனவர்களை விமானம் மூலம் மத்திய அரசு உடனடியாக இந்தியா அழைத்து வர வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில், `‘ஈரானில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவது குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது’’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று திடீரென காஷ்மீருக்கு வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரானில் சிக்கி தவிக்கும் காஷ்மீரிகளின் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்களை தால் ஏரி பகுதியில் உள்ள சர்வதேச மாநாட்டு வளாக அரங்கில் சந்தித்தார். அப்போது, ஈரானில் சிக்கி உள்ள காஷ்மீரிகளை இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் விளக்கினார். விரைவில் அவர்கள் இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.