×

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கு நோட்டீஸ்: சபாநாயகர் தனபால் நடவடிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் திடீரென நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது, முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார்.  ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்கள் அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டனர். கடந்த 2017 பிப்ரவரியில், முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது, தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், ஆறுகுட்டி, சரவணன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.  ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 வாக்குகள் பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. அரசுக்கு  எதிராக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக கொறடா  வலியுறுத்தியதை தொடர்ந்து சபாநாயகர், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் 6 மாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களும் மீண்டும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர்கள் மீது சபாநாயகர்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரம் முதல்வர் எடப்பாடிக்கு எதிராகவும், டிடிவி.தினகரனுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட 18  எம்எல்ஏக்களின் பதவியை சபாநாயகர் பறித்தார். அதேபோன்று, அதிமுக கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11  எம்எல்ஏக்கள் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், ‘சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். இதில் அவரே  முடிவெடுக்கலாம்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இதை தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சபாநாயகரை சந்தித்து,  ‘நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரின் பதவியை பறிக்க வேண்டும்’ என்று மனு அளித்தார். ஏற்கனவே கடந்த  சட்டப்பேரவை கூட்டத் தொடரில், ‘நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று திமுக உறுப்பினர்கள்  பிரச்னையை கிளப்பினர்.இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத் தொடர் மீண்டும் நேற்று தொடங்கிய நிலையில், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் கடந்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீசுக்கு 14  நாட்களுக்குள் பதில் அளிக்க சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு 11 எம்எல்ஏக்களும் பதில் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் சபாநாயகர் இந்த  கூட்டத் தொடரிலேயே தீர்ப்பை அறிவிக்க வாய்ப்புள்ளது.

Tags : Speaker ,government ,OPS ,Edappadi , voted , government,MLA , OPS, Speaker, Thanapal ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியின் ெபருமை...