சென்னை: மோசமான பெண்ணாக சித்தரித்து மேடைகளில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை விஜயலட்சமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் சூரியாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. 2011ம் ஆண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீது பரபரப்பு புகார் அளித்தார். 3 ஆண்டுகளாக காதலித்து தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பிறகு சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் சீமான் கைது செய்யப்பட கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீமானை போலீசார் கைது செய்யவில்லை.
இதற்கிடையே மீண்டும் விஜயலட்சுமிக்கும் சீமானுக்கும் இடையே பிரச்னை தொடங்கி உள்ளது. கட்சியின் பொதுக்கூட்ட மேடைகளில் தன்னை பற்றி அவதூறு கருத்துகளை சீமான் தொடர்ந்து பேசிவருவதாகவும், அதேபோல், அவரது கட்சி நிர்வாகிகளும் தன்னை விலைமாது என்று பேசி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பி வருவதாகவும் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அவர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.