சென்னை: ராமேஸ்வரம் திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற கடலோர பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்கள், கடலில் மூழ்கி பலியாவதை தடுக்க திட்டம் ஒன்றை வகுக்கும்படி தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.ஏற்கனவே, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த இந்து சமய அறநிலையத்துறை, அனைத்து கோயில்களிலும் உள்ள குளங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து, நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கோயில் குளங்கள், நீர்நிலைகளில் மூழ்கி இறப்பு ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் போத்திராஜ் ஆஜராகி, 22 மாவட்ட கலெக்டர்களின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், நீரில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், பலியானவர்களின் விவரங்கள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஈரோடு மாவட்டத்தில் 2018 மற்றும் 2019ம் ஆண்டில் 220 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதாகவும், சென்னை உள்பட 13 மாவட்டங்களில் 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் 986 பேர் வரை பலியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கனகராஜ், கடலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் இருவர் கடலில் மூழ்கி பலியான விஷயத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பொதுமக்கள் பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது. 22 மாவட்ட கலெக்டர்கள் தவிர மீதமுள்ள கலெக்டர்கள் எப்போது அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.நீர்நிலைகளில் மூழ்கி பொதுமக்கள் பலியாவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவும் ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும்.
மனுதாரர் குறிப்பிட்டபடி திருசெந்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் கடற்கரை அருகே கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு திருவிழா நேரங்களில் மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கடலில் மூழ்கி மக்கள் பலியாகாத வகையில் இந்து சமய அறநிலையத்துறை, போலீஸ் மற்றும் தமிழக அரசு ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒரு புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.