×

திருவொற்றியூர் பகுதியில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் வீட்டின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர். சென்னை திருவொற்றியூர் வன்னியர் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாபு (43). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கோமதி (40). இவர்களுக்கு 10ம் வகுப்பு படித்து வரும் கீர்த்திவாசன் (15) என்ற மகனும், 8ம் வகுப்பு படித்து வரும் ஹரிணி (13) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு, வழக்கம்போல் தூங்க சென்றனர்.

இந்நிலையில், இரவு 11 மணி அளவில் வீட்டின் மேற்கரை கான்கிரீட் திடீரென பெயர்ந்து விழுந்ததில் பாபு அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் படுகாயமடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, இடிபாடுகளில் சிக்கிய 4 பேரையும் மீட்டு உடனடியாக திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார். அதில், 40 ஆண்டுகள் பழமையான வீடு என்பதால் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house ,Thiruvottiyur Thiruvottiyur , Thiruvottiyur area, roof of house, 4 persons, injury
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்