×

கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகளுக்கு எதற்காக போலீஸ் பாதுகாப்பு? ஐகோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி: தமிழக டிஜிபி பதில் தர உத்தரவு

சென்னை: தமிழகத்தில் எத்தனை தனி நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது, எதற்காக வழங்கப்படுகிறது என்று பதிலளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர்  மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 21ம் தேதி அவரது மகன் சதீஷ்குமார், தொழிற்சாலை உள்ளிட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தனது பெயருக்கு மாற்றுமாறு உறவினர்களுடன் வந்து குப்புசாமியை தாக்கியுள்ளார்.  இதுகுறித்து குப்புசாமி சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் குப்புசாமியை அழைத்து சொத்துகளை மகனின் பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் வக்கீல்களின் ஆலோசனை பெற வந்த குப்புசாமி, ஊர் திரும்பவில்லை. இதையடுத்து, குப்புசாமியை ஆஜர்படுத்தக்கோரி அவரது சகோதரர் பக்தவச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜரானார். அப்போது, நேரில் ஆஜரான குப்புசாமி தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய தவறிய போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்த நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை தனி நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு எதற்காக பாதுகாப்பு வழங்கப்படுகிறது, போலீஸ் பாதுகாப்பு தேவையா, இல்லையா என்பது எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது, கட்டப்பஞ்சாயத்து  பேர்வழிகளுக்கு எதற்காக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், சமுதாயத்தில் தன்னை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள தனிநபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கபடுகிறதா என்று கேள்வி எழுப்பி இந்த கேள்விகளுக்கு மார்ச் 12ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டனர். மேலும், அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும்  உதவி ஆய்வாளரை ஆகியோர் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Court Judges ,Tamil Nadu , Kattapanaayayat, Police Security, Court of Justice, Tamil Nadu DGP
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...