சென்னை:திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரா.கண்ணகி 1992ம் ஆண்டு முதல் பல்வேறு சமூக பணிகளில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து தொண்டாற்றி வருகிறார். சுமார் 350க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றுவதற்கு பெரும் பங்காற்றியுள்ளதோடு, மகளிர் சுய உதவி குழுக்களை அமைப்பதிலும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். தகன மேடைகளில் சடலங்களை எரிக்கும் பணிகள் ஆண்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதனை தகர்த்து, பெண்களாலும் அப்பணியை மேற்கொள்ள இயலும் என்பதை நிரூபிக்கும் வகையில், துணிச்சலுடன் ரா.கண்ணகி திருவண்ணாமலை நகராட்சியில் எரிவாயு தகன மேடை பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவரின் தன்னலமற்ற சேவைவை கவுரவிக்கும் பொருட்டு, 2020ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று, ரா.கண்ணகிக்கு அவ்வையார் விருதுக்கான 1 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.