சேலம்: சேலத்தில் 3 பேரை தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்றதாக திருச்சியில் சிக்கிய சைக்கோ வாலிபர் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சேலம் போலீசார் அவரிடம் விசாரணை மேற் கொண்டுள்ளனர். சேலத்தில் அடுத்தடுத்து பழ வியாபாரி உட்பட 3 பேர் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகளை செய்ததாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி (22) என்பவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வணிக வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த திருச்சி அம்பிகாபுரம் தங்கேஸ்வரி நகரை சேர்ந்த காவலாளி செந்தில் குமார் (43) என்பவர் தலையில் மர்மநபர் பாறாங்கல்லை தூக்கி போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வணிக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவில் சிக்கிய வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.
அந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர் கறம்பக்குடி மணமடை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார்(27) என தெரியவந்தது. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தள்ளது. ராஜேஷ்குமார் பிறந்த சில நாட்களிலேயே இவரது தாய் இறந்துவிட்டார். தந்தையும் சில நாட்களில் இறந்துவிட்டார். ராஜேஷ்குமாரின் 16வது வயதில் (2009-10) நண்பர்களை குளிக்க அழைத்துச் சென்று அங்குள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். 3வது நபரை கிணற்றில் தள்ளி கொன்றபோது பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார். இதில் கைதான அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்த அவர் சொந்த ஊருக்கு வராமல் திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளார்.
கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான ராஜேஷ்குமார் வழிப்பறி செய்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2ம் தேதி காவலாளி தலையில் கல்லை போட்டு தப்பி சொந்த ஊரில் திரிந்தவரை கறம்பக்குடி போலீசார் பிடித்து செம்பட்டிவிடுதி நால்ரோடு போலீசில் ஒப்படைத்தனர். ராஜேஷ்குமார் தலையில் கல்லை போட்டு கொன்று வருவதை தனி ஸ்டைலாக வைத்துள்ளார். சேலத்தில் கடந்த மாதம் நள்ளிரவுகளில் 3 பேரை தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்றுள்ளதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் சேலத்தில் 3 பேர் கொலையில் ஆண்டிச்சாமி என்பவரை கைது செய்து சிறையிலடைத்த சேலம் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டையில் கைதானவர் கூறுவது உண்மைதானா என்பதை அறிய சேலம் மாநகர போலீசார் திருச்சிக்கு சென்று ராஜேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரை சேலத்துக்கு அழைத்து வந்து, சேலத்தில் 3 பேரை கொலை செய்த இடத்துக்கு அழைத்து சென்று விசாரிக்க உள்ளனர்.