வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆற்றுப்பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கடந்த 18 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஈடுபட்டுள்ளவர்கள், வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து மின்இணைப்பை பெற்றிருப்பதாக மின்வாரிய அலுவலகத்தில், டவுன் போலீஸ் எஸ்ஐ கணேசன் புகார் அளித்தார்.
அதன்பேரில் மின் இணைப்பை துண்டிக்க சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் வந்தனர். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள், திடீரென அதிகாரிகளுக்கு பூ கொடுத்தனர். இந்த சம்பவத்தால் திகைத்த மின்வாரிய அதிகாரிகள், போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பள்ளிவாசலில் இருந்து மின்சாரம் எடுத்து பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து ஜெனரேட்டரை போராட்டக்காரர்கள் பயன்படுத்தினர்.