சென்னை: மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்துக்கு தலா ₹3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:சென்னை கே.கே. நகர் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி சுமித்ரா பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், புரசைவாக்கம் வ.உ.சி.நகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் மின் மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கஜேந்திரன் மகன் வின்சென்ட் மற்றும் ரங்கன் என்பவரின் மகன் உதயகுமார் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
சூளைமேடு கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பரின் மனைவி லீமாரோஸ் மின்சார வயரில் ஏற்பட்ட தீ விபத்தில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இதே போல மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.