புனே: வரும் 2021ம் ஆண்டு ஜனவரி முதல் சானிட்டரி நாப்கின் பாக்கெட்டுகளில் அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்ற மக்கும் தன்மையுள்ள பைகளையும் உற்பத்தியாளர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பெண்களை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த தூய்மை சேவகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
சானிட்டரி நாப்கின் உற்பத்தியாளர்கள், அவற்றுடன் மக்கும் தன்மையுடைய பைகளை இணைக்கும்படி அரசு பலமுறை கேட்டுக் கொண்ட பின்னரும், தற்போது வரை அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரி முதல், சானிட்டரி நாப்கின் பாக்கெட்டுகளுடன் அவற்றை அகற்றுவதற்கான மக்கும் பைகளை உற்பத்தியாளர்கள் இணைக்க வேண்டியதை மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளது. இனிமேல் மூவாயிரத்துக்கும் அதிகமாக மக்கள்தொகை உள்ள கிராமங்களுக்கும் தூய்மை திட்டத்தின் விதிமுறைகள் கட்டாயமாக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.