புதுடெல்லி: 15 சதவீதத்துக்கு குறைவான சந்தை பங்களிப்பு கொண்ட நிறுவனங்களுக்கு, குறைந்த பட்ச விலை நிர்ணய விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் டிராயிடம் வலியுறுத்தியுள்ளன. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: பெரிய நிறுவனங்கள் (ஜியோ) வருகையாலும், அவற்றின் இலவச மற்றும் குறைந்த கட்டண சலுகைகளாலும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லி, மும்பை தவிர பிற இடங்களில் சேவை வழங்கும் பிஎஸ்என்எல், மொத்த மொபைல் வாடிக்கையாளர்களில் 10.3 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளது. டெல்லி, மும்பையில் சேவை வழங்கும் எம்டிஎன்எல்லுக்கு 0.29 சதவீத வாடிக்கையாளர்கள்தான் உள்ளனர். ஆனால், ஜியோ 32.1 சதவீதம், ஏர்டெல் 28.43 சதவீதம், வோடபோன் - ஐடியா 28.89 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளன. எனவே, 15 சதவீதத்துக்கு குறைந்த சந்தை பங்களிப்பை கொண்ட பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணய விதிகளில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.