புதுடெல்லி: டெல்லி கலவர செய்தியை பாரபட்சமாக வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், ஏசியாநெட் நியூஸ், மீடியா ஒன் ஆகிய இரண்டு மலையாள மொழி செய்தி சேனல்களுக்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. இதை நீக்கக் கோரி 2 சேனல்களும் மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதின. இதைத்தொடர்ந்து, இந்த தடை நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. இந்நிலையில், இந்த செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கும் முடிவு பற்றி மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சருக்கே தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத் தலைவர் ரஜாத் சர்மா வெளியிட்ட அறிக்கையில், ‘மலையாள செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடை, பிரதமர் மோடியின் தலையீட்டால் நீக்கப்பட்டது. தற்போது சேனல்களின் ஒளிபரப்புக்கு தடை விதிக்கும் முடிவு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சரின் அனுமதியின்றி எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அமைச்சர் உத்தரவிட வேண்டும். இது போன்ற பிரச்னைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க, செய்தி ஒளிபரப்பு தொடர்பான அனைத்து புகார்களும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான செய்தி ஒளிபரப்பு தரநிலை அதிகார குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.