புதுடெல்லி: டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தியதால், மாநிலங்களவை கடந்த வாரம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் மட்டுமே நடந்துள்ளது. பட்ஜெட் தொடரின் 2வது கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. இதில் டெல்லியில் நடந்த வன்முறைகளை குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட வருகின்றனர். இதனால், அவை அலுவல்கள் முழுமையாக முடங்கியது.
மாநிலங்களவை கடந்த வாரத்தில் மொத்தம் 28 மணி நேரம் 30 நிமிடங்கள் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், எதிர்கட்சிகளின் அமளியால், மாநிலங்களவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் மட்டுமே மாநிலங்களவை கடந்த வாரம் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிலைக்குழுவின் மானியக் கோரிக்கை விவாவதத்திலும் 50 சதவீத எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்ைல. நாடாளுமன்ற முட்டுக்கட்டையை போக்க ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.பி.க்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.