×

மகளை காதல் திருமணம் செய்தவரை ஆணவக் கொலை செய்த தொழிலதிபர் தற்கொலை

திருமலை: மகளை காதல் திருமணம் செய்த வாலிபரை ஆணவக்கொலை செய்த வழக்கில் சிக்கிய தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்டார். தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாலாகுடாவை சேர்ந்த தொழிலதிபர் மாருதிராவ். இவரது மகள் அமிர்தா. இவர் வேறுபிரிவை சேர்ந்த பிரனய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத மாருதிராவ், 2018ம் ஆண்டு செப்டம்பர் 1ம்தேதி 3 மாத கர்ப்பிணியாக இருந்த அமிர்தா மற்றும் பிரனயை மிரியாலகுடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது மாருதிராவ் ஏற்பாடு செய்த கூலிப்படை கும்பல், மருத்துவமனை வெளியே அமிர்தாவின் கண்ணெதிரில் பிரனயை வெட்டிக்கொலை செய்தது. இந்த ஆணவக்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் மாருதிராவ் உள்பட கூலிப்படையை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் தனக்கு சாதகமாக சாட்சி கூறினால் தனது சொத்துக்களை வழங்குவதாக மகள் அமிர்தாவுக்கு மாருதிராவ் தூது அனுப்பினார். இதனை ஏற்க அமிர்தா மறுத்தார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாருதிராவ், 7 மாத சிறை தண்டனைக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஆரிய வைசிய பவனில் மாருதிராவ் நேற்றிரவு தங்கினார். இன்று காலை அவர் அறையில் சடலமாக இருப்பதை ஊழியர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனத்தெரிகிறது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறையை சோதனையிட்டனர்.

அப்போது, மாருதிராவ் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், ‘அமிர்தா அம்மாவுடன் சென்றுவிடு’ என்று கூறி, அமிர்தா குறித்து மேலும் பல தகவல்கள் எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் அந்த கடிதத்தை ரகசியமாக வைத்துள்ளனர். பின்னர் மாருதிராவ்வின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்த தகவலை தெரிந்து கொண்ட அமிர்தா நிருபர்களிடம் கூறுகையில், எனது தந்தை இறந்தது குறித்து டிவி செய்தியில் நான் பார்த்தேன். மருமகனை கொன்று விட்டோமே என்ற வருத்தத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம். அல்லது வேறு என்ன காரணம் என தெரியவில்லை என்றார்.

Tags : Businessman ,suicide , Love marriage, homicide, businessman suicide
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது