புதுடெல்லி: முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், ஒரு பெண் தேயிலை இலைகளை பறிக்கும் படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து, ‘இந்திய பெண்கள் மிகவும் உற்சாகமடைய செய்கின்றனர்’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கு, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெளிட்ட பதிவில், ‘பீட்டர்சன் தற்போது ஒரு ஆவணப்படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியாவில் இருக்கிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார்.
அவர், ஒரு பெண் தேயிலை பறிக்கும் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய பெண்கள் கடின உழைப்பு, தைரியம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றால் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றனர். அவர்கள் புதிய இந்தியா மற்றும் அரசு நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பீட்டர்சன், இங்கிலாந்துக்காக 104 டெஸ்ட் மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.