×

பவானி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் 7 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பு

ஈரோடு: பவானி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் ஏழு டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கடக்கிறது. இதை தடுக்க ஆற்றின் குறுக்கே ஒன்பது இடங்களில் கதவணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் உற்பத்தியாகும் பவானி ஆறு அங்கிருந்து கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில் பாய்ந்து, மீண்டும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து சமவெளியில் பயணிக்கும் பவானி ஆறு, மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக கொத்தமங்கலம் வந்து பின்னர் பவானிசாகர் அணையை அடைகிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு தொடங்குகிறது. இங்கிருந்து சத்தியமங்கலம், கொடிவேரி, கோபி, அத்தாணி, ஆப்பக்கூடல், ஜம்பை வழியாக பவானி வந்தடைகிறது. பின்னர் பவானியில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு வழியாக நிரம்பி முக்கூடல் சங்கமிக்கும் கூடுதுறையில், காவிரி ஆற்றில் கலக்கிறது.

பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை 92 கி.மீ தூரம் இந்த ஆறு பயணிக்கிறது. பவானிசாகர் அணையில் 10 சதவீதம் மண்மேடாக உள்ளதால் இந்த அணையில் 32.5 டி.எம்.சி. வரை மட்டுமே தண்ணீரை தேக்கிவைக்க முடியும். அணை நிரம்பும் காலங்களில் அணையில் இருந்து வரும் நீரானது கொடிவேரி அணைக்கட்டு வழியாக வந்து, காவிரி ஆற்றில் கலக்கிறது. அணைக்கு நீராதாரமாக மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர்தான் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சராசரியாக ஆண்டுதோறும் 5 டி.எம்.சி. முதல் 7 டி.எம்.சி. வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டு காவிரி ஆற்றில் கலக்கிறது. ஆனால், இந்த அணையை நம்பியுள்ள கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பாசன கால்வாய்களில் உரிய காலத்தில் போதிய நீர் இருப்பு இல்லாமல் தண்ணீர் திறக்க முடியாத நிலை இருக்கிறது.

இவ்வாறு வெளியேறும் உபரிநீர்  தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழை பெய்யும் காலக்கட்டத்தில் வெளியேறுவதால் அந்த மாவட்ட மக்களுக்கும் பயனின்றி வீணாக கடலில் கலக்கிறது. இந்நிலையில், ஆண்டுதோறும் பவானிசாகர் அணையில் இருந்து வரும் பவானி ஆற்றின் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையிலும், இந்த உபரிநீரை தேக்கி வைத்து மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் பவானி ஆற்றில் கதவணைகள் கட்ட வேண்டும் என தடப்பள்ளி, கொடிவேரி பாசன விவசாயிகள் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக மத்திய அரசின் நீர்வளத்துறையை விவசாய சங்க நிர்வாகிகள் அணுகியபோது தற்போது நீரை சேமிக்கும் வகையில் ஜல்சக்தி என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பவானி ஆற்றில் கதவணை அல்லது தடுப்பணை அமைப்பது தொடர்பாக மாநில அரசு பரிந்துரை செய்யவேண்டும். அப்போதுதான் உரிய நிதியை ஒதுக்கமுடியும் என கூறியுள்ளனர். இந்நிலையில், பொதுப்பணித்துறையினர் பவானி ஆற்றில் எந்தெந்த இடங்களில் தடுப்பணை அமைக்க முடியும் என ஆய்வு நடத்தினர். அய்யன்சாலை, கோணமூலை, சிவியார்பாளையம், கொங்கர்பாளையம், புளியம்பட்டி, கள்ளிப்பட்டி, அத்தாணி, பெருந்தலையூர், சிறைமீட்டான்பாளையம் ஆகிய 9 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 4 இடங்களில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்துள்ளனர். அரசிடமிருந்து உரிய ஒப்புதல் பெற்று நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க உள்ளனர். அடுத்தக்கட்டமாக, கூடுதலாக தேவைப்படும் இடங்களில் படிப்படியாக தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளனர்.

ஆனால், விவசாய சங்கத்தினர், ‘‘பவானி ஆற்றில் தடுப்பணை கட்டுவதால் எந்த பயனும் இல்லை. கதவணை கட்ட வேண்டும். அப்போதுதான் அதிக அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டமும் உயரும்’’ என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதை ஏற்க பொதுப்பணி துறையினர் மறுத்துவிட்டனர். அதனால், இழுபறி நீடிக்கிறது. தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இதுகுறித்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி.தளபதி கூறியதாவது: பவானி ஆற்றில் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகளோ, கதவணைகளோ கிடையாது. கொடிவேரி அணைக்கட்டும் தண்ணீரை தேக்கி வைக்கும் அணை கிடையாது. பாசனத்திற்கு தண்ணீரை பிரித்து அனுப்பும் அணையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களிலும், அணையில் அதிக அளவு தண்ணீர் நிரம்பி வழியும் காலங்களிலும் தண்ணீரை சேமிக்க முடியாமல் போகிறது.

ஆண்டுதோறும் சராசரியாக 5 முதல் 7 டி.எம்.சி வரை உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. குறிப்பாக, கடந்த 2018ம் ஆண்டு 21 டி.எம்.சி., 2019ம் ஆண்டு 7 டி.எம்.சி தண்ணீர் உபரியாக கடலில் கலந்துள்ளது. இப்படி வெளியேறும் உபரிநீரால் விவசாயிகள் யாருக்கும் பயன் இல்லை. இதனால், பவானி ஆற்றில் 10 கி.மீட்டருக்கு ஒரு கதவணை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், கதவணைக்கு பதிலாக, 9 இடங்களில் தடுப்பணை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளனர். தடுப்பணை அமைப்பதால் விவசாயிகளுக்கு பயன் தராது. தடுப்பணை அமைக்கும்போது 5 முதல் 7 அடி உயரத்திற்கு தான் தண்ணீரை தேக்க முடியும். ஆனால் கதவணை அமைத்தால் 15 அடி முதல் 20 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். தடுப்பணை அமைக்கும்போது மணல் சேர்ந்து, சேமிக்கும் தண்ணீரின் அளவும் குறையும்.

மேலும் ஆண்டுதோறும் பராமரிக்க செலவிட வேண்டும். கதவணையாக அமைக்கும்போது தேவையான அளவு தண்ணீரை பயன்படுத்தலாம். காவிரி ஆற்றிற்கு செல்லும் மணலும் ஆங்காங்கே சேர்ந்து தூய்மையான குடிநீர் கிடைக்கும். இதன்மூலமாக, நிலத்தடி நீர்மட்டமும் உயரும். தேவைக்கேற்ப தண்ணீர் பயன்பாடு இருக்கும். இதனால், அணையில் அனைத்து காலத்திலும் தண்ணீர் இருக்கும். ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிதண்ணீருக்கும் பிரச்னை இருக்காது. இதை கருத்தில் கொண்டு தடுப்பணை கட்டாமல், கதவணையாக கட்ட வேண்டும். கதவணையாக கட்டும்போது நீண்ட காலத்திற்கு பயனுள்ள திட்டமாக இருக்கும். இவ்வாறு சுபி.தளபதி கூறினார்.

Tags : Bhavani ,river ,sea , Bhavani
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்