×

தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: டெல்லியில் இருந்து சிறப்பு மருத்துவக் குழு காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம்: தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து டெல்லியில் இருந்து மருத்துவக் குழு தமிழகம் வந்துள்ளது. தமிழகம் வரும் டெல்லி மருத்துவக்குழு காஞ்சிபுரம் துணை சுகாதார நிலையத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர். கொரோனா வைரசால் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை, மத்திய அரசின் சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ்குமார் உறுதி செய்துள்ளார். ஓமன் நாட்டில் சுமார் 12 ஆண்டுகள் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த 27ம் தேதி விமானம் மூலம் தமிழகம் திரும்பினார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா அறிகுறிகள் இருந்ததால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அங்கு அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கிண்டியில் கிங் ஆய்வு நிறுவனத்திற்கும், புனேவில் உள்ள ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொழிலாளியை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தனி வார்டில் தங்க வைத்து, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர், பாதிக்கப்பட்டு இருப்பது, இதுவே முதன்முறையாகும். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ஊரில் யாருக்கேனும் தொற்று இருக்கிறதா, அவருடன் விமானத்தில் பயணித்தவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறனர்.மேலும், அந்த தொழிலாளியின் சொந்த கிராமத்தின் பெயரை ரகசியமாக வைத்துள்ள அதிகாரிகள், அங்கு ஒரு மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளனர்.

மேலும் ஒருவருக்கு அறிகுறி

அமெரிக்காவிலிருந்து கத்தார் வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி உள்ளது. சென்னை வந்த சிறுவனிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Tags : Coroner ,Delhi ,Tamil Nadu ,team ,Kanchipuram Coroner ,Kanchipuram , Tamil Nadu, Corona, Delhi, Special Medical Group, Kanchipuram
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...