சென்னை: நடிகர் அஜித் குமார் இணையதளத்தில் எந்த பக்கத்திலும் இணையவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அஜித் குமாரின் கையெழுத்துடன் ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த அறிக்கை போலியானது என்று, அஜித் குமார் சார்பில் நேற்று அவரது வழக்கறிஞர் எம்.எஸ்.பாரத் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: நடிகர் அஜித் குமாரின் சட்ட ஆலோசகர்கள் நாங்கள். இந்த நோட்டீசை அவரது அறிவுறுத்தலின் பேரிலும், அவரது சார்பாகவும் வெளியிடுகிறோம். நேற்று முன்தினம் அஜித் குமார் வெளியிட்டதாக ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பரவியது அவரது கவனத்துக்கு வந்துள்ளது. அதில், சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது போல் இருக்கிறது. அந்த கடிதம் அஜித் குமார் பெயருடன் ஒரு போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு, அவரது போலி கையெழுத்தையும் இணைத்து இருப்பதை பார்க்கும்போது அதிர்ச்சி அளிக்கிறது.
அந்த கடிதம் அஜித் குமாரால் வெளியிடப்படவில்லை என்றும், அதில் தெரிவித்த கருத்துகள் யாவும் மறுக்கப்படுகின்றன என்றும் திட்டவட்டமாக தெரிவிக்க, தற்போது அவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அஜித் குமார் கடந்த காலத்தில் ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு எந்தவொரு சமூக ஊடக கணக்குகளும் இல்லை என்றும், சமூக ஊடகங்களின் எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. அவருக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் இல்லை. அவர் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை. மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாக கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை. இறுதியாக, தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்சிக்காரரின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிடுகிறார்.