×

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மூர்மார்க்கெட் முதல் திருவள்ளூர் வரை பெண்கள் மூலம் மின்சார ரயில் இயக்கம்: 10 நாள் கொண்டாட்டம்

* விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகளை தெற்கு ரயில்வே நடத்துகிறது.

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று பெண்களே மூர் மார்க்கெட்-திருவள்ளூர் இடையே மின்சார ரயிலை இயக்கினர். உலக மகளிர் தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்களை கவுரவிக்கும் வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தது. அனைவரும் சமம் என்ற கருப்பொருளை முன்வைத்து இந்த ஆண்டு தெற்கு ரயில்வே மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறது. இதையடுத்து கடந்த 1ம் தேதியில் இருந்து வரும் 10ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் தெற்கு ரயில்வேக்குட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் ரயில்வேயில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம், கட்டுரை போட்டி, தனித்திறமை போட்டிகள், விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகளை தெற்கு ரயில்வே நடத்துகிறது.

இந்நிலையில் சென்னை மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் ரயில்நிலையம் வரை வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரயிலை, ஆண்கள் அல்லாமல் முழுவதுமாக பெண்களை கொண்டு இயக்க திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.15 மணிக்கு மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மின்சார ரயிலில், இன்ஜின் டிரைவர், கார்டு, டிக்கெட் பரிசோதகர்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஊழியர், நிலைய அதிகாரி உள்பட அனைவரும் பெண்களாக இருந்தனர். இந்த மின்சார ரயிலில் 10 பெண் ஊழியர்கள் கொண்ட குழு தலைமையில் இயக்கப்பட்டது. அதேபோன்று மறுமார்க்கமாக  காலை 10.50 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து  மூர்மார்க்கெட் ரயில்நிலையம் வரை அதே மின்சார ரயில் இயக்கப்பட்டது. பெண்கள் ரயிலை இயக்கும் போது அங்கிருந்த பயணிகள் மற்றும் பெண்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் கலந்து கொண்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆணுக்கு நிகராக பெண்ணும் சமம் என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்கள் சென்னை கோட்டத்தில் மகளிர் தினம் கொண்டாடப்படும். மகளிர் தினத்தையொட்டி நாளை (இன்று) சென்னை கோட்டம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

பேசின்பாலம் பணிமனையில்..
மகளிர் தினத்தை முன்னிட்டு, பேசின் பாலம் ரயில்வே பணிமனையில் பெண் ஊழியர்களே அனைத்து பணிகளும் செய்து வருகின்றனர். 1,200 ஊழியர்களில் 190 பேர் பெண் ஊழியர்கள். ரயில்களில் ஆயில் சோதனை, ரயில் பெட்டிகள் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பெண்கள் செய்கின்றனர். அதேபோன்று சென்னை கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் ரயில்களை இயக்கி வருகின்றனர்.


Tags : women ,Thiruvallur ,World Women's Day ,Moormarket ,Day Celebration , World Women's Day, Moormarket, Thiruvallur, electric train movement
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...