திருக்கோவிலூர்: கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாசி தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழையூரில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 27ம் தேதி வாஸ்து பூஜை நடந்தது. மறுநாள் 28ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் வீரட்டானேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் நகர வீதிகளில் வீதியுலா வந்தார்.
9ம் நாளான இன்று முக்கிய விழாவான தேர்த்திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலையில் மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ேதரில் வீரட்டானேஸ்வரர் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாளை திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தொடர்ந்து 13வது நாள் திருவிழாவான வரும் 11ம் தேதி 108 கலச அபிஷேகம், யாக வேள்வியுன் திருவிழா நிறைவடைகிறது.