×

மானாமதுரையில் விபத்தை தடுக்க நான்குவழிச்சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை

மானாமதுரை: மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே விபத்தை தடுக்க தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை-ராமேஸ்வரம் இடையே நான்குவழிச்சாலை அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, கமுதக்குடி, பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் பாலப்பணிகள் மட்டும் முழுமையடையவில்லை. மானாமதுரை ஆனந்தபுரம் பைபாஸ் ரோட்டில் இருந்து நகரை இணைக்கும் சாலையும் பைபாஸ் ரயில்வேகேட் மேம்பாலமும் சந்திக்கும் இடத்தில் இருவழி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை வழியாக நகரில் இருந்து மதுரை செல்லவும், ராமேஸ்வரம் செல்லவும் முடியும்.
அதே போல புது பஸ் ஸ்டாண்ட் அருகே மேம்பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டரில் உள்ள சங்கமங்கலம் வரை நான்குவழிச்சாலையின் இருபுறமும் வீடுகள், கடைகள், தனியார் திருமண மண்டபங்கள், ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவுவாயில் உள்ளிட்டவை உள்ளன. இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். முக்கிய நாட்களில் சாலையின் இருமருங்கிலும் பாரதசாரிகள், டூவீலர்களில் செல்வோர் ரோட்டை கடப்பது வழக்கம். தற்போது நான்குவழிச்சாலை பணி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மேலப்பசலை வரை முடிந்துள்ள நிலையில் வாகனங்களின் வேகம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

இருபுறமும் சர்வீஸ் ரோடு இருந்தும் விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் நடமாட்டமுள்ள இப்பகுதியில் இரண்டு சாலைகளுக்கு நடுவில் (பேரிகார்ட்) தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முருகானந்தம் கூறுகையில், ‘வழிவிடுமுருகன் கோயில் பஸ் ஸ்டாப்பில் தினமும் நூற்றுக்கணக்கானோர் இறங்கி ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர், மரக்கடை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சாலையை கடக்கின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களில் மண்டபங்களுக்கு வருவோர் ரோட்டை கடந்து செல்ல வேண்டிய நிலையில் வாகனம் வருவது தெரியாமல் கடக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட விபத்து நடந்துள்ளது. விபத்தை தடுக்கும் முன் புது பஸ் ஸ்டாண்ட் முதல் வழிவிடுமுருகன் கோயில் வரை தடுப்புகள் அமைக்க வேண்டும்’ என்றார்.


Tags : accident ,Manamadurai Manamadurai , Manamadurai, Fourth Road, Blockades
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...