×

புல்வாமா தாக்குதல்: வெடிகுண்டு தயாரிக்க ஆன்லைன் மூலம் வேதிப்பொருட்கள் வாங்கிய இளைஞன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தது என்ஐஏ!

ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலுக்காக வெடிகுண்டு தயாரிக்க, ஆன்லைன் மூலம் வேதிப்பொருட்கள் வாங்கிய இளைஞன் உள்ளிட்ட 2 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படையை சேர்ந்த அடில் அகமது தார் நடத்திய இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீநகரை சேர்ந்த வைசுல் இஸ்லாம் மற்றும் புல்வாமாவை சேர்ந்த முஹம்மத் அப்பாஸ் ராதர் என்ற 2 தீவிரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில், 19 வயது நிரம்பிய வைசுல் இஸ்லாம், புல்வாமா தாக்குதலுக்கு முன்பாக, தன்னுடைய ஆன்லைன் ஷாப்பிங் கணக்கை பயன்படுத்தி, வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள், பேட்டரிகள் மற்றும் பிற பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளான். இவற்றை, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் கட்டளையின்பேரில் ஆன்லைன் மூலம் வாங்கியதாக விசாரணையில் அவன் ஒப்புக்கொண்டதாக என்ஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மூலம் வெடிகுண்டு தயாரிப்புக்கு தேவையான பொருட்களை வாங்கிய வைசுல் இஸ்லாம், அவற்றை தீவிரவாதிகளிடம் நேரடியாக வழங்கியுள்ளான். இதேபோல கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு இளைஞனான முஹம்மத் அப்பாஸ் ராதர், தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்திய அடில் அகமது தார் உள்ளிட்ட 4 தீவிரவாதிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்தவன். இந்த வழக்கில் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்ட தாரிக் அஹம்மத் ஷா மற்றும் அவரது மகள் இன்ஷா ஜன் ஆகியோரது வீட்டிற்கு தீவிரவாதிகளை பத்திரமாக அனுப்பிய வேலையையும் ராதர் மேற்கொண்டாக என்ஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



Tags : attack ,NIA ,arrests ,Pulwama ,Srinagar ,terror attack , Pulwama Attack, Bomb, Online, Srinagar boy, Arrest, NIA
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை