×

நித்தியானந்தாவின் முக்கிய சீடர் தூக்கிட்டு தற்கொலை: காதலில் தோல்வியடைந்ததால் தற்கொலை முடிவு எனத் தகவல்!

சேலம்:  பாலியல் வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நித்தியானந்தாவை மாதக்கணக்கில் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், இல்லாத கைலாசத்திற்கு அதிபராக உள்ள நித்தியை நம்பி முகநூலில் கைலாசவாசி என முகநூலில் படம் வைத்த சீடர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதுவரை 3 சீடர்கள் உயிரிழந்த நிலையில் 4வதாக ஒரு சீடர் சேலம் மாவட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தலைவாசல் அடுத்த ஆரகலூர் எரிக்காடு பகுதியை சேர்ந்த ராமசந்திரன்-கலையரசி தம்பதியரின் மகன் தினேஷ் (27). முதுகலை பொறியியல் பட்டதாரியான தினேஷ், படிப்பிற்கு உரிய வேலை கிடைக்காததால், கடந்த 2017ம் ஆண்டு நித்தியின் ஆசிரமத்தில் சீடராக சேர்ந்துள்ளார். அதன் பிறகு தனது பெயரை ஸ்ரீ நித்ய வீர பத்ரானந்தா  என மாற்றிக்கொண்டு நித்தி அடி கும்பல் என்ற பெயரில் இயங்கிவந்த மீம்குழுவில் செயல் தலைவராக இணைந்து, நித்திக்கு எதிராக பேசுபவர்களுக்கு மீம்ஸ் மூலம் பதிலடி கொடுத்துவந்துள்ளார்.

அப்போது அதே ஆசிரமத்தில் நித்தியின் சிஷ்யையாக இருந்த ஒரு பெண்ணுக்கும் தினேசுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதல் விவகாரம் அந்த பெண்ணின் தந்தைக்கு தெரியவந்ததும், தனது மகளுக்கு ஜாதகத்தில் தோஷம் எனக் கூறி தினேஷை தவிர்த்துள்ளார். இதற்கிடையே தங்கள் மகன் இருக்கும் இடத்தை அறிந்த தினேஷின் பெற்றோர் மகனிடம் நித்தியின் லீலைகளை எடுத்து கூறி வீட்டிற்கு அழைத்து சென்றனர். பெண் சிஷ்யை மீதான காதலால் நித்தியின் ஆசிரமத்தை பிரிய மனமில்லாமல் தவித்த தினேஷ், சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறி திரிசூலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதி ஒன்றில் கன்டைனரில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியின் சென்னை கிளையில் கைலாசவாசியாக இணைந்து மீண்டும் பத்ராந்தாவானார். நித்தியானந்தா நியூஸ் என்பதை சுருக்கி என் நியூஸ் என்ற பெயரில் யூடியூப் செய்தி சேனல் நடத்தி வந்த பத்ரா நித்தியின் நம்பிக்கைக்குரிய சீடர்களின் ஒருவராக வலம் வந்தபடியே தனது காதலையும் வளர்த்துள்ளார். மகளின் தந்தை, தினேஷ் ஒரு பெண் பித்தன், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி அவரின் மனதை மாற்ற முயற்சித்துள்ளார்.

இதனால், காதலி தினேஷிடம் பேச மறுத்ததாக கூறப்படுகிறது. விரக்தியில் வியாழக்கிழமை தனது ஊருக்கு சென்று தந்தை ராமசந்திரனிடம் தனது காதல் விவகாரத்தை கூறி, அந்த பெண்ணை திருமணம் செய்துவைக்க கூறியுள்ளார். அதுபற்றி குடும்பத்தினர் எவ்வித கருத்தும் கூறாத நிலையில், தாய், தந்தை இருவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில், காதல் தோல்வியை குறிக்கும் விதத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்ட தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய பெற்றோர் காவல் துறைக்கு தெரியாமல் உடனடியாக அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனையறிந்த தலைவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே நேப்பாளத்தில் ஒரு சீடரும், பெங்களூரில் பிடதி ஆசிரமத்தில் ஒரு சீடரும், புதுச்சேரியில் ஒரு சீடரும் என 3 பேர் மர்மமான முறையில் விபத்து, தற்கொலை என உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 4வதாக தினேஷ் பத்ரா மரணமடைந்துள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


Tags : suicide ,Nithyananda ,disciple , Nithyananda, disciple suicide, love, failure, information
× RELATED 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய...