×

ம.பி., கொள்ளையர்களிடம் வியாபாரி போல் பேரம் பேசி வரவழைத்தனர் பஸ்சில் கொள்ளையடிக்கப்பட்ட 3 கோடி தங்க, வைர நகைகள் மீட்பு: தப்பிய 5 பேர் கும்பலை பிடிக்க சேலம் போலீசார் முகாம்

சேலம்: சேலம் அருகே ஆம்னி பஸ்சில் 3 கோடி நகையை கொள்ளையடித்தது, மத்திய பிரதேச கொள்ளை கும்பல் என தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையின் கிளை, கோவையில் இயங்கி வருகிறது. இந்த கிளைக்கு தேவையான தங்கம், வைர நகைகளை ஊழியர்கள், ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இக்கடை ஊழியரான கவுதம் (25), கடந்த மாதம் 8ம் தேதி இரவு ₹3 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகளை எடுத்துக்கொண்டு, தனியார் ஆம்னி பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார்.அந்த ஆம்னி  பஸ், மறுநாள் காலை 9.30 மணிக்கு சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் டோல்கேட் பகுதியில், பயணிகள் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது, கவுதம் இறங்கிச் சென்று சாப்பிட்டார். அந்த நேரத்தில் பஸ்சில் ஏறிய மர்மநபர், ₹3 கோடி மதிப்பிலான நகையை கொள்ளையடித்துச் சென்றார்.  இதுபற்றி சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பஸ்சில் இருந்த சிசிடிவி கேமரா, சுங்கச்சாவடிகளில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு கார் பின்தொடர்ந்து வந்தது தெரியவந்தது. அந்த காரில் வந்தவர்கள்தான், இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை தனிப்படை போலீசார் உறுதி செய்தனர். அந்த கார் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்திற்கு சென்றனர்.  அங்கு, தார் மாவட்டம் முல்தானிகேர்வா பகுதியை சேர்ந்த முஸ்தபா, அக்தர், முனீர், அகமதுகான், அஜய்ரத்தோர் ஆகிய 5 பேர் கொள்ளையில் ஈடுபட்டதை தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார், மத்திய பிரதேசத்தில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வைர நகைகளை மீட்க வைர வியாபாரி போல் பேரம் பேசி வாங்கி, மடக்கிப்பிடிக்கலாம் என தனிப்படை போலீசார் திட்டமிட்டனர்.

அதன்படி, கொள்ளையர்களிடம் வைர வியாபாரி போல் பேசி, அக்கும்பலை நகைகளுடன் மத்திய பிரதேச மாநிலம் தரம்பூர் அருகேயுள்ள காளிப்பாவடி என்ற இடத்திற்கு வரவழைத்தனர். அங்கு வைர நகைகளை விலைக்கு வாங்குவதுபோல் நகைகளை கையில் வாங்கிப்பார்த்தனர். அப்போது அவை கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். உடனே அக்கும்பலை மடக்கி பிடிக்க மறைந்திருந்த போலீசார் பாய்ந்து வந்தனர். ஆனால், மற்ற போலீசார் வருவதை பார்த்ததும், வியாபாரி போல் நடித்தவரை தள்ளிவிட்டு விட்டு காரில் ஏறி கொள்ளை கும்பல் தப்பியது. தங்க, வைர நகைகளை அப்படியே போட்டுவிட்டு ஓடியதால், அதனை முழுமையாக போலீசார் மீட்டனர்.  இதையடுத்து ₹3 கோடி தங்க, வைர நகைகளை எடுத்துக் கொண்டு ஒரு தனிப்படையினர் சேலம் திரும்பினர். மற்றொரு தனிப்படை போலீசார், கொள்ளையர்களை பிடிக்க மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட நகைகள் எவை?
கொள்ளையர்களிடம் இருந்து 592 கிராம் எடையுள்ள வைரக்கல் பதித்த 7 நெக்லஸ், வைரம் மற்றும் கலர் கற்கள் பதித்த 287 கிராம் எடையுள்ள காதணி 14 செட், வைரம் மற்றும் கலர் கற்கள் பதித்த சுமார் 11 கிராம் எடையுள்ள ஒரு மோதிரம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது. இதன்மதிப்பு ₹3 கோடி கோடியாகும். இதனைத்தான், சம்பவத்தன்று ஒரு கொள்ளையன், பஸ்சில் இருந்து எடுத்துச் சென்றான்.

Tags : police camp ,gang ,Salem ,robbers ,dealer , MP summoned,robbed,capture ,gang
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....