சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். சென்னையில் மருத்துவமனையில் க.அன்பழகனிடம் நலம் விசாரித்த பிறகு மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). வயது முதிர்வு காரணமாக கடந்த மாதம் வரை வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை குறித்து நேரில் விசாரிக்க சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர்களின் உடல் நிலை இருந்து வருகிறது. பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் க.அன்பழகனுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், தற்போது அவர் உடல்நிலை சிகிச்சை பலனளிக்காமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், க.அன்பழகன் உடல்நலம் தொடா்பாக மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தனர்.