×

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் 10 ஆயிரம் பேர் பேரணி

தஞ்சை: குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 10 ஆயிரம் பேர் பேரணி நடத்துகின்றனர். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஆண்கள், பெண்கள் கண்டன பேரணி நடத்துகின்றனர். அதிராம்பட்டினத்தில் சி.ஏ.ஏ-வை எதிர்த்து 17வது நாளாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் உள்ள அத்தர் பள்ளிவாசல் முன் ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்து வருகிறது. நேற்று மதியம் தஞ்சை நகர டி.எஸ்.பி.ரவிச்சந்திரன் மற்றும் அதிரடிப்படை போலீசார் போராட்ட பந்தலில் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், நீதிமன்றம் போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்கவில்லை என்பதால் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் இல்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கப்பட்டது. அதற்கு கைதாக தயாராக இருப்பதாக பெண்கள் தெரிவித்தனர். ஆனால் போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் திரும்பி சென்றனர். இதையடுத்து இன்று 21வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாபநாசம் அருகே உள்ள சக்கராபள்ளியில் 16வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே 17வது நாளாகவும், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் 21வது நாளாகவும் இன்று போராட்டம் நடந்து வருகிறது. முத்துப்பேட்டையில் 21 நாளாக இன்று போராட்டம் நடந்து வருகிறது.

மயிலாடுதுறை சின்னபள்ளிவாசல் தெருவில் 11வது நாளாகவும், புதுக்கோட்டை கலீப் நகர் 4ம் வீதியில் 10வது நாளாகவும், கறம்பக்குடி புளியன்சோலை பகுதி மதரசா பள்ளிவாசல் 17வது நாளாகவும், மணமேல்குடி அருகே அம்மாபட்டினத்தில் 19வது நாளாகவும், நாகூர் சியா மரைக்காயர் தெரு, திருவாரூர் அடியக்கமங்கலம் ஆகிய இடங்களில் 8வது நாளாகவும் இன்று போராட்டம் நடக்கிறது. திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இஸ்லாமிய அமைப்பினர் இன்று 20வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்வரை போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் கூறினர்.

Tags : Adirampattinam , Citizenship
× RELATED மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம்...