போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் வரத்து அதிகரிப்பால் தக்காளியை ஏரியில் விவசாயிகள் கொட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, புலியூர், அரசம்பட்டி, பாரூர், செல்லம்பட்டி, அகரம், மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த மாதங்களில் ஒரு கிலோ தக்காளி ₹30க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் மேலும் தக்காளி சாகுபடியில் ஆர்வம் காட்டினர். இதனால் தற்போது தக்காளி உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது.
அறுவடை செய்யப்பட்ட தக்காளியை போச்சம்பள்ளி, புலியூர், காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்டிகளுக்கு விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக வாங்கி பெட்டியில் அடைத்து சென்னை கோயம்பேடு, மதுரை, உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் தக்காளியை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் விலையும் குறைந்துள்ளது.
விலை குறைந்தள்ளதால் அறுவடை செய்த தக்காளியை டெம்போ, டிராக்டர் மூலம் ஏற்றி வந்து புலியூர் ஏரியில் மீன்களுக்கு உணவாக விவசாயிகள் கொட்டி செல்கின்றனர். மேலும் சில விவசாயிகள் தோட்டங்களில் அறுவடை செய்யாமல் கால்நடைகளுக்கு உணவாகவும் விட்டு மேய்ச்சலுக்கு விடுகின்றனர். கடந்த மாதம் போச்சம்பள்ளி பகுதியில் சாகுடி செய்யப்பட்ட முள்ளங்கியை வியாபாரிகள் வாங்க முன் வராததால் அப்படியே நிலத்திலே ஏர் ஓட்டி உரமாக்கினர். இந்த நிலையில் தக்காளியை ஏரியில் கொட்டி வருவதால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.