கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்த வாலிபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தியாவில் கொேரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த வாலிபர் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்தது. இதனைத்தொடர்ந்து அவரை இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் வைத்து கண்காணித்து வந்தனர். அவரின் ரத்த மாதிரிகள் உள்ளிட்டவை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு முடிவில் வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும் அவர் தொடர் கண்காணிப்பில் இருப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், “சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வந்த 78 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் உடனடியாக தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடு சென்று வந்தவர்கள் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், வீட்டில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்களின் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இதனால், வைரஸ் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்” என்றார்.