×

குரோம்பேட்டை துர்கா நகர் அருகே மலைப் பகுதியில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் இடிப்பு: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை

தாம்பரம்: குரோம்பேட்டை அருகே மலைப் பகுதியில் கட்டப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  குரோம்பேட்டை, துர்காநகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே உள்ள மலை உச்சியில் இந்திய சுவிசேஷ திருச்சபை என்ற தேவாலயம் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள அந்த தேவாலயத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த இருவர் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேவாலயத்தை அகற்ற உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேவாலய நிர்வாகத்தினர் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேவாலயத்தை அகற்ற வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.  உடனடியாக தேவாலயத்தை இடித்து அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், வருவாய் துறையினருக்கு கடந்த ஜனவரி 9ம் தேதி உத்தரவிட்டது.

இது தொடர்பாக பல்லாவரம் தாசில்தார் ராஜேந்திரன் தேவாலய நிர்வாகிகளை அழைத்து நீதிமன்ற உத்தரவுப்படி தேவாலயம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அகற்ற உத்தரவு வந்துள்ள தகவலை தெரிவித்தார். இதற்கு தேவாலய தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பல்லாவரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று தேவாலயத்தை அகற்ற பொக்லைன் இயந்திரத்தோடு வந்தனர். தாம்பரம் மற்றும் சேலையூர் காவல் உதவி ஆய்வாளர்கள் அசோகன், சகாதேவன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் கால அவகாசம் வேண்டும் என தேவாலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாலை 3 மணி வரை வருவாய்துறையினர் காலஅவகாசம் கொடுத்தனர்.

நீதிமன்ற மேல் முறையீடு குறித்து உத்தரவு வரும் வரை தேவாலயத்தை இடிக்க மாட்டோம் என போலீசார் உறுதி அளித்தனர். ஆனால் தேவாலயத்தை இடிக்க கூடாது என்ற உத்தரவை தேவாலயம் தரப்பில் ஒப்படைக்கவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் வருவாய்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சர்ச் படிக்கட்டை இடிக்க வந்தனர். அதற்கு கிறிஸ்தவர்கள் மற்றும் காஞ்சி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம், தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல், ரஞ்சன் உட்பட ஏராளமானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் செய்தனர். இதில் பாஸ்டர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தேவாலயத்தின் உள்ளே இருந்தவர்கள் உள்ளே இருந்து கொண்டு வெளியில் வராமல் கதவை பூட்டிக் கொண்டனர். போலீசார், வருவாய்துறையினர் கதவை உடைத்து அவர்களை வெளியேற்றினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்றி விட்டு தேவாலயத்தை இடிக்கும் பணியைத் தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றி சென்று அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய்துறையினர் கூறுகையில், ‘‘நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இது தொடர்பாக தேவாலய தரப்பினருக்கு முறையாக தெரிவிக்கப்பட்டு அவர்கள் கேட்ட நேரம் வரை அவகாசம் கொடுத்து அவர்கள் எந்த உத்தரவும் பெறாத நிலையில் அகற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தான் போலீஸ் பாதுகாப்போடு செய்துள்ளோம்’’ என தெரிவித்தார்.



Tags : Demolition ,church ,Christian ,hill ,Krompet ,Durga Nagar ,hillock , Chrompet, Durga Nagar, Hill Country, Christian Church
× RELATED கிறிஸ்தவ சபை ஊழியர்களை மிரட்டிய பாஜக...