அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் அருள்மணி (60), ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர், தற்போது அண்ணாநகரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் துப்பாக்கி ஏந்திய காவலராக வேலை பார்த்து வருகிறார். இதற்கென அவர் உரிய அனுமதியுடன் துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்களை ஒரு கைப்பையில் வைத்து, பணியின்போது பாதுகாத்து வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நகைக்கடை பாதுகாப்பு பணியில் இருந்த அருள்மணி, துப்பாக்கி தோட்டாக்கள் இருந்த கைப்பையை அங்குள்ள ஒரு அறையில் வைத்துவிட்டு, கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பி வந்து பார்த்தபோது, தோட்டா வைத்திருந்த பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.