வேளச்சேரி: போதை தகராறில் வக்கீலை பீர் பாட்டிலால் அடித்து கொன்ற நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை பெரும்பாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், விஜயாபுரம் பிரதான சாலை, மாம்பாக்கம் பிரதான சாலை சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சுமார் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த காயங்களுடன் கிடந்த வாலிபர் ஆடையை சோதனை செய்தனர். அப்போது, சட்டை பாக்கெட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தற்காலிக அடையாள அட்டை இருந்தது. அதில், திருநெல்வேலியை சேர்ந்த ராகவ் (26) என இருந்தது. மேலும், பேன்ட் பாக்கெட்டில் செல்போன் இருந்தது.
அதில், கடைசியாக பேசிய எண்ணுக்கு போலீசார் அழைத்தபோது இறந்து கிடப்பவர் ராகவ் என உறுதியானது. இதையடுத்து ராகவ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் சில தினங்களுக்கு முன், ராகவ் சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 4வது தெருவில் வசிக்கும் அரியலூர் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த கரிகாலன் (23), தென்காசியை சேர்ந்த ரமணன் (24) ஆகிய நண்பர்களை பார்க்க செல்வதாக சொல்லிவிட்டு வீட்டில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வாலிபர்கள் இருவரும் போதையில் இருந்தனர். அவர்களை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், ‘தங்களை சந்திக்க நண்பர் ராகவ் இரண்டு தினங்களுக்கு முன் வந்தார். நேற்று முன்தினம் இரவு மூன்று பேரும் சேர்ந்து மதுபானம் அருந்தியபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர், வேங்கைவாசல் அருகே உள்ள மதுபான கடையில் மது வாங்கி அருந்தியபோது மீண்டும் ராகவ் எங்களை தாக்கியதால் கோபம் அதிகமாகி பீர் பாட்டில் மற்றும் கல்லால் தாக்கினோம். பின்னர், வீட்டுக்கு வந்து விட்டோம்’ என தெரிவித்தனர். பின்னர், நண்பர்கள், ராகவ்விற்கு என்ன ஆனது என்றும் கேட்டனர். அப்போது, ராகவ் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ரமணன் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கரிகாலன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். தொடர்ந்து, போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.