புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான மனுக்களை, சபரிமலை வழக்கு விசாரணைக்குப் பிறகு விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ‘‘சிஏஏ.வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 22ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மத்திய அரசு இன்னும் தனது பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்,’’ என்றார். இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘‘மத்திய அரசின் பதில் மனு, இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படும்,’’ என்றார். பின்னர், ‘சபரிமலை, மசூதிகளில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்குகளை 9 நீதிபதிகள் அடங்கி அமர்வு மறுபரிசீலனை செய்கிறது. இந்த விசாரணைக்குப்பின், சிஏஏ.வுக்கு எதிரான மனுக்கள் விசாரிக்கப்படும்,’’ என்று நீதிபதிகள் அறிவித்தனர்.