×

தொடர் உடல்நலக்குறைவு இருந்ததால் கர்ப்பிணி குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை: ராயப்பேட்டையில் பரபரப்பு

சென்னை: கர்ப்பிணிக்கு தொடர்ந்து ரத்தப் போக்கு ஏற்பட்டதால் விரக்தியடைந்து தனது ஒரு வயது மகளுடன் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ராயப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை பைலட் சந்து பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு லதா (27) என்ற மனைவியும் ஒரு வயதில் நிக்சீதா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் லதா இரண்டாவது முறையாக கருவுற்று இருந்தார். இதனால் அவருக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அன்று இரவு முதல் லதாவுக்கு மீண்டும் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை கணவர் சத்யநாராயணன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் லதா மற்றும் அவரது ஒரு வயது மகள் மட்டும் இருந்தனர். மதியம் 1 மணி அளவில் லதா வீட்டில் இருந்து அலறும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். லதா உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு அங்கும் இங்கும் ஓடியபடி அலறி துடித்துக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த அவருகில் இருந்தவர்கள் கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு உள் பக்கமாக தாழ்ப்பாள்போடப்பட்டு இருந்தது. பிறகு அனைவரும் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, லதா உடல் முழுவதும் எரிந்து இறந்து கிடந்தார். அருகில் ஒரு வயது மகள் நிக்சீதாவும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் ராயப்ேபட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து நிக்சீதாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிக்சீதாவும் உயிரிழந்தார். பிறகு லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடந்து 3 வருடங்கள் ஆவதால் போலீசார் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். கருவுற்ற நிலையில் இளம்பெண் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் ராயப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Continuous illness, pregnancy, childbirth, suicide, suicide
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை